தமிழக ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட்டுக்கு இனி தனி வரிசை
சென்னை: தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சொந்த பயணத்துக்காக தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் திருவிழாக் காலங்களில்தான் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. தற்போது அனைத்து நாட்களிலும் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் நேற்று தட்கல் டிக்கெட் பெறுவதற்காக வந்திருந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சொந்த பயணத்துக்காக வந்தவர்களுக்கு 4 கவுண்டர்களும், பிரதிநிதிகளுக்காக வந்தவர்களுக்கு ஒரே ஒரு கவுண்டரும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி சொந்த பயணத்துக்காக வந்தவர்கள் 98 பேருக்கும் பிரதிநிதிகளுக்காக வந்தவர்களில் 27 பேருக்கும் டிக்கெட்டுகள் கிடைத்தன.
இதே போன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தவர்களில் 70 சதவீதம் பேர் சொந்த பயணத்திற்காக வந்தவர்கள் என்றும், 30 சதவீதம் பேர் பிரதிநிதிகளுக்காக டிக்கெட் எடுக்க வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இந்த முறையின்படி சொந்த பயணத்திற்கு வந்தவர்கள் அதிக பயன் அடைந்துள்ளதால், பயணிகள் மத்தியில் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications