ஜெகன் சொத்துக்குவிப்பு ஊழலில் சிக்கிய ஆந்திர அமைச்சர்கள்: இருவர் ராஜினாமா
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிச் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ள இரு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தரமனா பிரசாத் ராவ், சபிதா ரெட்டி என்ற அந்த இரு அமைச்சர்களும், முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை நேற்று மாலை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாகவும், ரியல் எஸ்டேட், சுரங்கம் உள்பட பல நிறுவனங்களில் முறைகேடாக சட்ட விரோதமாக முதலீடுகள் செய்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பிறகு ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு முறை ஜாமீன் கேட்டும் அவரது மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி ஆனது. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஓராண்டாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
ஜெகன்மோகனின் சொத்து குவிப்பு முறைகேடுகளில் ஆந்திர அமைச்சர் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக உள்துறை மந்திரி சபீதா ரெட்டி, சாலைகள் மற்றும் கட்டுமானத்துறை மந்திரி தர்மனா பிரசாதராவ் சுங்க மந்திரி வெங்கட் ரமணா ஆகிய மூவரும் ஊழல் செய்து இருப்பதாக விசாரணையில் சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இதையடுத்து சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலும் சபீதா ரெட்டி, பிரசாதராவ், வெங்கட் ரமணா பெயர்கள் இடம் பெற்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இரு அமைச்சர்களையும் உடனே பதவி விலக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சபீதா ரெட்டி, பிரசாதராவ் இருவரையும் தொடர்புகொண்ட கிரண்குமார் ரெட்டி, உடனே பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்று சபீதா ரெட்டி, பிரசாதராவ் இருவரும் நேற்றிரவு 11 மணிக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அமைச்சர் பதவியுடன் அவர்கள் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தனர்.
இதனால் சபீதா ரெட்டி தேர்வான மகேஸ்வரம் தொகுதியும், பிரசாதராவ் தேர்வான ஸ்ரீகாலகுளம் தொகுதியும் காலியானது. இதனால் ஆந்திர மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியை கவிழ வைத்துவிடுமோ என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பதவிக்கான ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட முதல்வர், சபீதா ரெட்டி, பிரசாதராவ் இருவரின் எம்.எல்.ஏ. பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதா என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு, வெளியில் வந்ததும் தங்களது சொந்த காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்களிடம் நிருபர்கள் பேட்டி காண திரண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் ராஜினாமா பற்றி எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.
மேலும் பலர் ராஜினாமா?
இதனிடையே ஆந்திராவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பல அமைச்சர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications