தேர்தலுக்கு அரசு பணம் ரூ11 கோடி... டெல்லி முதல்வரிடம் வசூலிக்க லோக் ஆயுக்தா பரிந்துரை!
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தல் விளம்பரத்துக்காக அரசு பணம் ரூ11 கோடியை செலவிட்ட முதல்வர் ஷீலா தீட்சித்திடமிருந்து அந்த தொகையை வசூலிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு லோக் ஆயுக்தா இன்னொரு அதிரடி பரிந்துரையை செய்துள்ளது.
முந்தைய விவகாரம் என்ன?
கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலின் போது குறைந்த விலையிலான வீடுகள் கட்டித் தருவதாக முதல்வர் ஷீலா தீட்சித் உறுதி அளித்திருந்தார். இந்த திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும் இதனால் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு குடியரசுத் தலைவருக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரையின் அடிப்படையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியிருந்தார். இதனால் ஷீலா தீட்சித் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்னொரு பரிந்துரையையும் அனுப்பியிருந்தது லோக் ஆயுக்தா.
தேர்தலுக்கு அரசு பணம்
இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கான விளம்பரங்களுக்கு ஷீலா தீட்சித் மொத்தம் ரூ22 கோடியை செலவு செய்துள்ளார். இதில் ரூ11 கோடி, அரசு பணம் என்று டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா லோக் ஆயுக்தாவில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த லோக் ஆயுக்தா, ஷீலா தீட்சித் செலவிட்ட அரசுப் பணம் ரூ11 கோடியை அவரிடம் இருந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இப்பரிந்துரையில் அரசுகள் தங்களது வளர்ச்சித் திட்டங்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரை லோக் ஆயுக்தா கேட்டுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications