மன்மோகன் ரொம்ப மோசம்... அடுத்த பிரதமராக மோடிதான் வரனும்: சி.என்.என்-ஐபிஎன் சர்வே
டெல்லி: 10வது ஆண்டாக பிரதமராக தொடரும் மன்மோகன்சிங்கின் செயல்பாடுகளில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வர பெரும் ஆதரவு இருப்பதாகவும் சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதையொட்டி பல ஊடகங்களும் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்புகளை நடத்தி வெளியிட்டிருக்கின்றன. பொதுவாக ஆளும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியே வெளியாகி இருக்கிறது. அத்துடன் இப்போது தேர்தல் நடந்தால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மன்மோகன்சிங் மோசம்
இதில் சி.என்.என்.- ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் மன்மோகன்சிங் மிகவும் மோசம் என 56% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 67% பேர் மத்திய அரசு நம்பகத் தன்மையை இழந்துவிட்டது என்று கூறியுள்ளனர். குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசம் என்று 61% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பலவீனமான அரசு
அதேபோல் தற்போதைய மன்மோகன்சிங் அரசு மிகவும் பலவீனமானது..முடிவுகளை எடுக்க தயங்குகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் கடந்த ஓராண்டில் ஊழல்கள் அதிகரித்துவிட்டதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மோடிதான் பிரதமராகனும்
பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் வர வேண்டும் என்ற கருத்துக்கு பொதுமக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன்சிங் ஆகியோருக்கான ஆதரவைவிட இரண்டு மடங்கு ஆதரவு மோடிக்கு இருப்பதாகவும் சி.என்.என்.- ஐ.பி.என். கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தே.ஜ. கூட்டணிக்கு அமோக ஆதரவு
ஏபிபி நியூஸ்- நீல்சன் கருத்துக் கணிப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 136 இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 206 இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications