காவிரிப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகா சதி! வைகோ குற்றச்சாட்டு
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல.
தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த, பா.ஜ.க. முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
தற்போது, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.பரமேஸ்வரா, காவிரிப் பிரச்சினையில் முந்தைய பா.ஜ.க. அரசு கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டு இருந்தாலும், அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவோம் என்று கூறி இருக்கின்றார். மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையாவின் கருத்தையே, காங்கிரஸ் தலைவரின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மத்திய அரசால் பிப்ரவரி 20 ஆம் தேதி, அரசு இதழில் வெளியிடப்பட்டது. அதில் மீண்டும் மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டப்படி அதில் எந்த நியாயமும் இல்லை.
நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தை உடனடியாக மத்திய அரசு அமைத்து இருக்க வேண்டும். ஆனால், கர்நாடக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்திய காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே தாமதம் செய்தது.
தற்போது காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் வந்துவிட்டது. இனி, கர்நாடகத்திற்குச் சாதகமாகவே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்துகொள்ளும் என்பது, பழைய நிகழ்ச்சிகளின் மூலம் நமக்குத் தெளிவாகப் புலனாகிறது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இதற்காக வழக்குத் தொடுத்து இருக்கின்றது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக்கோரி, தமிழக அரசு பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரிப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசின் வஞ்சகத்தையும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் போக்கையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பாற்ற அனைவரும் ஒருமித்து எழுந்து காவிரிப் பிரச்சினையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications