பள்ளி மாணவர்களின் மனைவிகள்… மோசடி சர்டிபிகேட்… பீகாரில் நூதன மோசடி
பாட்னா: பண மோசடியை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை நம்ம நாட்டுக்காரர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தஅளவுக்கு கிடைக்கிற சந்தில் சிந்து பாடுவதில் சமர்த்துக்காரர்கள். பீகாரில் ஒரு நூதன பண மோசடி சத்தம் போடாமல் நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.
நிதீஷ் குமாரின் பீகாரில் இப்படி ஒரு மோசடியா என்று எல்லோரும் வாய் பிளந்து நிற்கிறார்கள். காரணம், இந்த மோசடியில் பள்ளிக்கூடச் சிறார்களுக்குச் சம்பந்தம் இருப்பதுதான்.
அரசு தரும் நல நிதியை சுருட்டத்தான் இப்படி ஒரு பகாசுர மோசடியில் பீகாரில் பலர் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளனராம்.
ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம்
ஏழைகளுக்கான வீடு கட்டம் திட்டத்தை இந்திரா ஆவாஸ் யோஜனா மூலம் பீகாரில் அமல்படுத்தி வருகிறார்கள். இதன் படி, கிராமப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட நிதி வழங்கப்படுகிறது. இதைத்தான் மோசடியாக சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
பெகுசராய் மோசடி
பெகுசராய் என்ற கிராமத்தில்தான் இது கொடி கட்டிப் பறக்கிறது. அங்குள்ள சிறார்கள் பலருடைய பெயர்களில்தான் இந்த மோசடி நடக்கிறது. இதற்காக அந்த சிறார்களுக்குத் திருமணமாகி விட்டதாகவும் மோசடியான ஆவணங்களைக் காட்டி மோசடி செய்துள்ளனர்.
3ம் வகுப்பு சச்சின் ராம்
சச்சின் ராம் இதற்கு ஒரு உதாரணம். இவன் இப்போதுதான் 3வது வகுப்பே படிக்கிறான். ஆனால் இவனுக்குத் திருமணமாகி விட்டதாகவும், அவனது மனைவி பெயர் ஷீலா தேவி என்றும் காட்டி போர்ஜரி செய்துள்ளனர்.
குண்டன் ராம் - ஜிதேந்திரா ராம்
அதேபோல குண்டன் ராம், ஜிதேந்திரா ராம் ஆகிய மற்ற இரண்டு மூன்றாம் வகுப்பு மாணவர்களையும் பயன்படுத்தி பணத்தைப் பெற்றுள்ளனர். இவர்களது மனைவியராக ரீமா தேவி, பபிதா தேவி ஆகியோரைக் காட்டியுள்ளனர்.
நானே வருவேன்..
இவர்களுடைய மனைவியரை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். காரணம், எல்லாமே மோசடியான, கற்பனையான பெயர்கள்தான். ஒரு சிலர் இறந்து போனவர்களின் பெயர்களைக் கூட மனைவியாக காட்டியிருந்தனர்.
கூட்டுக் களவாணித்தனம்
பஞ்சாயத்து பிரதிநிதிகள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து புரோக்கர்கள் மூலம் இந்த பண மோசடி நடந்துள்ளதாம்.
வீடு கட்ட ரூ. 70,000
இந்திரா ஆவாஸ் யோஜனா மூலம் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போர் வீடு கட்டிக் கொள்ள மத்திய அரசு ரூ. 70,000 நிதியுதவி அளிக்கிறது. இதைத்தான் இப்படி மோசடியாக சுரண்டி வருகின்றனர்.
மனைவி பெயரில்தான் நிதி
இந்த நிதியை மனைவி பெயரில்தான் தருகிறார்கள் என்பதால் அதைப் பெறவே கல்யாணமானதாக காட்டி சுரண்டியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications