துப்பாக்கியுடன் 10 மணி நேரம் அட்டகாசம் செய்த பைனான்சியர் மன நல காப்பகத்தில் சேர்ப்பு
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்து 10 மணி நேரம் பொதுமக்களையும், போலீஸாரையும் பெரும் பீதிக்குள்ளாக்கிய சினிமா பைனான்சியர் விஜயகர் மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சப்த மாலிகா அடுக்குமாடி குடியிருப்பில், வசித்து வந்தவர் விஜயகர். கடந்த, மூன்று ஆண்டுகளாக, வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தவில்லை. இதனால், விஜயகர், வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உரிமையாளர் கூறினார். தினமும் ஒரு பெண்ணை அழைத்து வந்து கும்மாளமிட்டதால், குடியிருப்பு வளாக நல சங்கத்தினரும், விஜயகரை, வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, குடியிருப்போர் நல சங்க அலுவலகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த, விஜயகர், தன்னால் எந்த பிரச்னையும் இல்லை என, கடிதம் எழுதி தருமாறு மிரட்டினார். சங்க பிரதிநிதி மறுக்கவே, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேல் நோக்கி ஒரு ரவுண்டு சுட்டதுடன், அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு, தன் வீட்டுக்கு, ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்.
இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் குவிந்தனர். தன் வீட்டில் இருந்த பெண்ணை, துப்பாக்கியால் சுட்டு விடுவதாக, விஜயகர் மிரட்டினார். காலை 11:00 மணிக்கு துவங்கிய இந்த மிரட்டல் நாடகம், இரவு 9:00 மணிக்கு முடிவுக்கு வந்தது. தனது வீட்டைவிட்டு காரில் பெண்ணுடன் தப்ப முயன்ற விஜயகரை பொதுமக்கள் சரமாரியாக அடித்துப் பிடித்தனர்.
விஜயகரைக் கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். விஜயகரின் டாக்டர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்தபோது, கடந்த ஒன்றரை ஆண்டாக, விஜயகர், மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு, விஜயகரை நேற்று, போலீசார் அழைத்து சென்றனர். அவரது மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை, டாக்டர்களும் உறுதி செய்தனர்.
இதையடுத்து, எழும்பூர், 13வது மாஜிஸ்திரேட் சிவசுப்பிரமணியன் முன்னிலையில், விஜயகரை ஆஜர்படுத்தி, புழல் சிறைக்கு, போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவரை சிறையில் அனுமதிக்க முடியாது என சிறைத் துறையினர் மறுத்து விட்டனர். இதையடுத்து, எழும்பூர், 14வது மாஜிஸ்திரேட் ஆபிரகாம் லிங்கன் முன்னிலையில், விஜயகரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, மாஜிஸ்திரேட்டிடம், விஜயகர், தன் வீட்டு முகவரியை தெளிவாக கூறினார். தன்னை நேற்று (முன்தினம்) முதல் போலீசார், "ரவுண்டு' கட்டியதாகவும் தெரிவித்தார். "மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதா?' என்று மாஜிஸ்திரேட் கேட்டதற்கு, "இல்லை' என்று, விஜயகர் பதில் அளித்தார். இதையடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவுபடி, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில், விஜயகரை போலீசார் சேர்த்தனர்.
எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த, விஜயகரை அழைத்து வந்த போலீசார், கோர்ட் வளாகத்தின் வெளியே, ஒதுக்குப்புறமாக வேனை நிறுத்தி இருந்தனர். வேன் உள்ளே இருந்த விஜயகர், செய்தியாளர்களை பார்த்து, நாட்டை காப்பாற்ற வந்தவனை, ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க பாருங்க சார்... என, தன் சட்டையை கழற்றி காண்பித்தார். தொடர்ந்து, தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தார்.
விஜயகர் உண்மையிலேயே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications