வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை

காரைக்காலில் வசித்து வந்த வினோதினி (23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்திருந்த போது காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் அவர் மீது ஆசிட் விசினார். இதில் படுகாயமடைந்த வினோதினி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இறந்தார்.
வினோதினியை ஒருதலையாக காதலித்ததாகவும், தன்னை காதலிக்க மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைதான சுரேஷ் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர். வினோதினி இறந்ததையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சுரேஷ் மீதான வழக்கு காரைக்கால் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த கொலைவழக்கு தொடர்பாக 482 பக்க குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது 'வினோதினி மீது நான் ஆசிட் வீசவில்லை' என சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி கூறியிருந்தான். மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தான்.
அந்த மனு மீதான விசாரணையின்போது ஜாமீனில் சுரேசை விடுதலை செய்ய கூடாது என காரைக்கால் போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் விசாரணை முடிவில் நிபந்தனை ஜாமீனில் சுரேசை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் காரைக்கால் சிறையில் இருந்து சுரேஷ் விடுதலை ஆனான்.
சுரேஷ் தினமும் காலை 10 மணிக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications