சிறையில் ரூ.25 சம்பளத்திற்கு பைண்டிங் வேலை செய்யப்போகும் நடிகர் சஞ்சய் தத்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் புனே ஏர்வாடா சிறையில் உள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு பேப்பர் பைல்கள் செய்வது மற்றும் பேப்பர் பைண்டிங் செய்வது ஆகிய பணிகள் வழங்கப்பட உள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜரான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு புனேவில் உள்ள ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறை கைதிகள் சமைப்பது, மெழுகுவர்த்தி செய்வது போன்ற பணிகளை செய்வது வழக்கம். சஞ்சய் தத்துக்கு என்ன பணி கொடுக்கப் போகிறார்களோ என்று ஊடகங்கள் யூகித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் அவருக்கு வழங்கப்படவிருக்கும் பணி என்னவென்று தெரிய வந்துள்ளது.

பைண்டிங் வேலை
பாதுகாப்பு காரணங்களுக்காக சஞ்சய் தத் சக கைதிகளுடன் சேர்ந்து இருக்காதவாறு போலீசார் பார்த்துக் கொள்கின்றனர். அதனால் அவர் தனது அறையில் இருந்தே பேப்பர் பைல் செய்வது, பேப்பர் பைண்டிங் செய்வது ஆகிய வேலைகளை செய்யவிருக்கிறார்.

ரூ.25 முதல் ரூ.40 வரை சம்பளம்
கொடுத்த வேலையை முடித்தால் கைதிகளுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை சம்பளம் வழங்கப்படும் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூங்கில் சேர் செய்த தத்
முன்பு ஏர்வாடா சிறையில் சஞ்சய் தத் இருந்தபோது அவருக்கு மூங்கில் சேர் செய்யும் வேலை அளிக்கப்பட்டது. அவர் செய்த சேர் அவர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு ஏலத்திற்கு விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications