உரிய தகவலைத் தராத மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.25000 ஃபைன்
மதுரை: தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கேட்டவருக்கு உரிய தகவல்களைக் கொடுக்க மறுத்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்பது புகாராகும். இது தொடர்பாக கடந்த ஆண்டு சர்ச்சை உருவானது. இது தொடர்பான ஆவணங்களைத் தருமாறு மதுரை வக்ஃபோர்டு கல்லூரி முன்னாள் முதல்வர் இஸ்மாயில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.
26.4.12 அன்று கொடுத்த விண்ணப்பத்தின் மீது ஓராண்டாக பதில் தராததால், இதுகுறித்து மாநில தகவல் ஆணையத்திடம் புகார் செய்தார் இஸ்மாயில்.
"கோரிக்கை மனுவைப் பெற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் நிலை வந்தால், ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும்" என்று சட்டம் சொல்கிறது.
ஆனால் பொருத்தமான காரணத்தைக் கூறாமல், உள்நோக்கத்தோடு தகவல்களைத் தர மறுத்திருக்கிறார்கள் பல்கலைக்கழக பொது தகவல் அலுவலர்கள்.
இதனால், காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் தகவலை வழங்கும்படியும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 250 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், உயர்ந்த பட்ச அபராதத்தொகை 25 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதால், பல்கலைக்கழக நிர்வாகம் அதிபட்ச அபராதத்தில் இருந்து தப்பியது.