கொளுத்துது வெயில்... பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா?
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிக் கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் வெயில் அடிக்கிறது. ஆங்காங்கே சில இடங்களில் கோட மழை பெய்தாலும் கூட பொதுவாக தமிழகமே வறண்டு போய் , வெயிலில் சிக்கித் தவித்தபடிதான் உள்ளது.
மேலும் பல நகரங்களில் கடும் அனல் காற்றுடன் 105 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்து வாங்குகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் வெயில் 109 டிகிரியைத் தொட்டு விட்டது.
இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டத்தைக் காண முடியவில்லை. மாணவர்களும் வழக்கமாக கிரிக்கெட் விளையாடப் போவார்கள், அவர்களும் போவதில்லை. வீட்டுக்குள் முடங்கி டிவியோடும், கம்ப்யூட்டரோடும் செட்டிலாகி விட்டனர்.
புதுவையில் கடும் வெயில் காரணமாக பள்ளிக் கூடத் திறப்பு ஜூன் 3ம் தேதியிலிருந்து 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலும் தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் கூறுகையில், புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையிலும் மற்ற இடங்களிலும் வெயில் அளவு நிறையவே குறைந்துள்ளது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications