என் மீதான பாஜகவின் நடவடிக்கை முட்டாள்தனமானது: ராம்ஜெத்மலானி சீற்றம்!

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நிதின் கட்காரி இருந்த போது அவருக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர் ஜெத்மலானி. ஊழல் புகாரில் சிக்கிய அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியவர் ஜெத்மலானி. மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையே பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஜெத்மலானியும் பதில் அனுப்பியிருந்தார். ஆனாலும் பாஜக அமைதியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து அண்மையில் அத்வானி வீட்டில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நுழைந்து பேசிய ஜெத்மலானி, தாம் பதிலளித்துவிட்ட பிறகும் இன்னமும் ஏன் என்னை நீக்காமல் வைத்திருக்கிறீர்கள்? என்று கொந்தளித்துவிட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து அவர் 6 ஆண்டுகாலம் பாஜகவில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம்ஜெத்மலானி. கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதிய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம். அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை.
நான் தொடங்கிய கருப்பு பண விவகார பிரச்சாரம் அவர்களை வெட்கப்பட வைத்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வரக்கோரி காங்கிரசுக்கு எதிரான எனது கோரிக்கைகளுக்கு கட்சியிலே ஆதரவு இல்லை. மேலும் என் மீது எடுத்துள்ள இந்த முட்டாள் தனமான நடவடிக்கையால் பாஜக அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால் அவர்கள் பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications