ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியம்... நீரா ராடியாவை எச்சரித்த நீதிபதி ஷைனி

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசியல் இடைத்தரகர் நீரா ராடியா சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற காரணத்தைக் கூறி அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு சாட்சியாக அவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
முக்கிய சாட்சி நீரா
தமது சாட்சியத்தின் போது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அடாக் குழும நிறுவனம் என்று கூறப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தகுதி இல்லை என்று அதிரடியாகக் கூறியிருந்தார். தொடர்ந்தும் அவர் சாட்சியம் அளித்த போது சில கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்த நீதிபதி ஷைனி, நீரா ராடியாவை இந்த வழக்கில் மிக முக்கியமான மதிநுட்ப உணர்வுள்ள சாட்சி என்று குறிப்பிட்டார்.
உரத்த குரலில் ..
நீராவிடம் குறுக்கு விசாரணை நடத்திய சி.பி.ஐ. தரப்பு வக்கீல், 2005-ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்த டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகளுக்குப்பிறகு லைசென்சு வழங்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். நீரா ராடியா அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தபோது குறுக்கிட்ட நீதிபதி ஷைனி, மிக சாதாரணமான இந்த கேள்விக்கே நீங்கள் பதில் சொல்லாமல் தவிர்க்க முயல்கிறீர்கள் என்று கூறியதுடன் உரத்த குரலில் உங்கள் பதிலை கூறுங்கள் எனக்கும் கேட்க வேண்டும். இங்கு வந்திருக்கும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் கேட்க வேண்டும் என்றார்.
53 வயது நீரா ராடியாவை பற்றி குறிப்பிட்ட நீதிபதி புத்திசாலித்தனமான தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கேட்கப்படும் கேள்வியை புரிந்து கொண்டு சுருக்கமாகவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பதில் அளிக்க வேண்டும் என்றார் நீதிபதி ஷைனி.












Click it and Unblock the Notifications