ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார் ஜெ.
சென்னை: ரூ1928 கோடி மதிப்பிலான தர்மபுரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோகான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர் 1982ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சீனிவாசன்தான். அதன் பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியராக இருக்கும்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டினார். பின்னர் நீண்டகாலம் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1991-96ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ350 கோடிக்கு இத்திட்டம் திட்டமிடப்பட்டது.
1998ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஜப்பான் நிதி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பொக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து ஜப்பான் நிதி உதவி கிடைக்காமல் இத்திட்டம் மீண்டும் கிடப்பில் போனது. 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 5 கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்தது. இதைத் தொடர்ந்து ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ரூ1928 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் தொடக்க விழா தர்மபுரி அம்பேத்கர் நகரில் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கியது பற்றியும் அதற்கான எதிர்ப்புகளைப் பற்றியும் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டையும் விவரித்தார்.












Click it and Unblock the Notifications