காங்கிரசாரே எழுதி வெச்சுக்குங்க.. சிபிஐ மூலம் ஜெயிச்சுட முடியாது: நரேந்திர மோடி சவால்
அகமதாபாத்: நாடு முழுவதும் சிபிஐ அமைப்பை வைத்து வெற்றி பெற முடியாது என்பதை காங்கிரஸ் கட்சியினர் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
குஜராத் மாநில இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸ் கட்சியினர் 5 ஆயிரம் பேர் நேற்று மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தனர். அவர்களை வரவேற்றுப் பேசிய மோடி, நமக்கான உறவு என்பது ரூ5 உறுப்பினர் படிவத்துடன் முடிந்து போய்விட்டது என்பது அல்ல..நாம் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்..நாம் உறுப்பினர் படிவததை வைத்துக் கொண்டு கட்சியை நடத்துகிறவர்கள் அல்ல... அடல் பிகாரி வாஜ்பாயை நினைத்துப் பாருங்கள்... ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் இந்த நாட்டின் பிரதமராக முடிந்தது. ஆம்.. இதுதான் பாஜகவின் கலாசாரம்.. பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.. ஆனால் காங்கிரஸ் கட்சியில் சாதாரண ஒரு தனிமனிதரால் இப்படியான ஒரு வாய்ப்பை பெற்றுவிட முடியுமா?

உங்களுடைய தந்தை அரசியலில் இருக்கலாம்.. அதெல்லாம் இந்த கட்சியில் ஒரு விஷயமே இல்லை..உங்களது மாணவப் பருவத்தை கட்சிக்காக செலவிட்டிருக்கிறீர்கள்..அதற்காக போலீசாரின் லத்திகளையெல்லாம் கூட எதிர்கொண்டிருக்கிறீர்கள்.. இப்போது அந்த கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறீர்கள் எனில் எவ்வளவு வலி இருக்கும் என்பதை உணர முடிகிறது.. உங்களது காயத்தை ஆற்ற வேண்டியதுதான் எனது முதல் கடமை.. நமது இலக்கு குஜராத் மாநிலம் ஒளிர வேண்டும் என்பதுதான் நமது கனவு.. காங்கிரஸ் கட்சியினர் சுவரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. உங்களால் சிபிஐ- வைத்து நாடு முழுவதும் வெற்றி பெற்றுவிட முடியாது. எதிரிகளை சிறைக்கு அனுப்பிவிட்டு உங்களால் மக்கள் தீர்ப்பை வாங்கிவிட முடியாது. உங்களது மக்கள் விரோத அரசியலை மக்கள் நிச்சயம் நிராகரித்துவிடுவர் என்றார்.
மைக்ரோசாப்ட் நிர்வாகிகள் சந்திப்பு
இதனிடையே குஜராத் மாநில அரசு நிர்வாகத்தில் மொபைல் கவர்னென்ஸ் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிர்வாகிகளும் குஜராத் முதல்வர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். இதன் மூலம் பணியிட மாற்றம், பணி நியமனங்கள் பற்றிய தகவல்கள் மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்படும். மைக்ரோசாப்ட்டின் வர்த்தகப் பிரிவின் ஆசிய தலைவர் கென் வெய் ஸ்வா மற்றும் இந்திய நிர்வாகி அருண் ராஜாமணி ஆகியோர் மோடியை சந்தித்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications