தமிழத்தில் குட்கா, பான் மசாலா தடை அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்று கடந்த 8-ந்தேதி சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து இந்தத் தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதிமுறைகளின்படி, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றை எந்த ஒரு உணவு பொருளிலும் சேர்க்கக்கூடாது. குட்காவும், பான் மசாலாவும் புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கப்படும் உணவு பொருளாக உள்ளன. எனவே, குட்காவுக்கும், பான்மசாலாவுக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.
எனவே, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை, நிக்கோடின் இடம்பெறும் இதர உணவு பொருட்கள் எந்த பெயரில் சந்தையில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் இந்த உத்தரவு வெளியான நாள் முதல் ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் தடை வந்தாலும், வியாபாரிகள் தங்கள் வசம் ஸ்டாக் உள்ள பொருட்களை அகற்ற ஒரு மாத கால அவகாசம் தரப்படும். மீறி வைத்திருந்தால் அதை போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications