காவிரி மேற்பார்வை குழு: நீர் திறக்க தமிழகம் கோரிக்கை-கர்நாடகம் மறுப்பு! ஜூன் 12-ல் மீண்டும் கூட்டம்!

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு கடந்த 2007-ல் வெளியானது. அதில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் ஜூன் மாதம் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி என 12 மாதங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரியில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி வந்தார். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 17-ந் தேதி பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதிய ஜெயலலிதா உடனடியாக வாரியம் மற்றும் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் தற்காலிக காவிரி மேலாண்மை குழுவை மத்திய அரசு அமைத்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இக்குழுவின் முதல் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கண்காணிப்பு குழு தலைவர் எஸ்.கே.சர்க்கார் தலைமை வகித்தார். தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், கேரள தலைமைச் செயலாளர் இ.கே.பரத்பூஷன், புதுச்சேரி தலைமைச் செயலாளர் சேத்தன்.பி.சாங்கி, மத்திய நீர் ஆணைய தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் பாசன பருவ காலமாக கணக்கிடப்படுகிறது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் இருந்து ஜூன் மாதத்தில் 10 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறக்க வேண்டும். இந்த மாதத்துக்கான தண்ணீரை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கர்நாடக தலைமை செயலாளர் கை விரித்துவிட்டார். தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து 4 வாரத்துக்கு பிறகுதான் பதில் சொல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனால் கூட்டத்தில் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. முதல் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால் ஜூன் 12-ந் தேதி மீண்டும் மேற்பார்வைக்குழு கூடும் என்று நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications