பெட்ரோல் விலை உயர்வு.. மக்களை முட்டாளாக்கும் மத்திய அரசு- ஜெயலலிதா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையாக இருக்கின்ற சூழ்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு எனவும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும் உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சுமத்தியுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மார்ச் 16ம் தேதி முதல் பெட்ரோல் விலையை குறைத்துக் கொண்டே வந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், மாதா மாதம் உயர்த்தி வந்த டீசல் விலையையும் மார்ச் மாத இறுதியிலிருந்து கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை நிறுத்திவைத்த மத்திய அரசு கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் டீசல் விலையை இரண்டு முறையும், பெட்ரோல் விலையை ஒரு முறையும் உயர்த்தி இருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
ரூபாய் வீழ்ச்சிக்காக பெட்ரோல் விலை உயர்வா?
தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு என்பது மத்திய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் அமைவது தான். தற்போது ரூபாயின் மதிப்பு நடப்புக் கணக்கில் உள்ள பற்றாக்குறை, அந்நிய செலாவணி சந்தையில் மேற்கொள்ளப்படும் ஊக வணிகம் மற்றும் எதிர்கால அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதைக் காரணமாகக் காட்டி பெட்ரோல் விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கை சரியானது அல்ல என்பதை நான் ஏற்கனவே பல முறை சுட்டிக்காட்டி உள்ளேன். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை, அதனை சுத்திகரிக்க ஆகும் செலவு, உள்நாட்டிலேயே பெறப்படும் கச்சா எண்ணெயின் உற்பத்தி செலவு மற்றும் சுத்திகரிப்பு செலவு ஆகியவற்றின் அடிப்படையிலே பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நான் பல முறை வலியுறுத்தி உள்ளேன். தற்போது பின்பற்றப்பட்டு வரும் இறக்குமதி சமநிலை விலை விகிதக் கொள்கை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தனி நிதியம் தேவை
இதே போன்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்வது என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு அமெரிக்க டாலருக்கு சரியான மதிப்பு 50 ரூபாய் என்பதே பல பொருளாதார நிபுணர்களின் கருத்து ஆகும்.
அந்த அடிப்படையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும்போதெல்லாம் அதனை சரி செய்வதற்கென தனியே ஒரு நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செய்தால் தான், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் விலை உயர்வு அதிர்ச்சியிலிருந்து சாமானிய மக்களை காப்பாற்ற இயலும். எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விற்கு வழிவகுத்துள்ள இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications