ராஜ்யசபா தேர்தல்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்க இந்திய கம்யூ. முடிவு!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் ஓர் இடத்துக்கு அதிமுகவிடம் ஆதரவு கேட்பது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, துணைச் செயலாளர் சி.மகேந்திரன், சட்டசபை உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், குணசேகரன் உள்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ராஜ்யசபா தேர்தலில் ஓர் இடத்தில் போட்டியிடுவது என்றும், அதற்காக அதிமுகவின் ஆதரவைக் கேட்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டசபை எண்ணிக்கை பலம் 8. ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அக்கட்சிக்கு மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தற்போது உள்ளது. எஞ்சிய 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் அதிமுகவின் ஆதரவை நாட முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் யார் வேட்பாளர் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிக்கவில்லை. அக்கட்சியின் எம்.பி.யாக உள்ள தேசிய செயலர் டி.ராஜா மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால் மாநில செயலாளர் தா. பாண்டியனோ தமக்குத்தான் அந்த எம்.பி.சீட் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முதலில் அதிமுக ஆதரவைப் பெறுவது என்றும் பின்னர் வேட்பாளரைத் தீர்மானிப்பது எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் நேற்று மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மத்திய கமிட்டியும் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் கட்சியின் மத்திய, மாநில உறுப்பினர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக் குழு விரைவில் அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications