கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள் - மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம்

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதம்:

கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர்.

இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன். இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால், மிருகத்தனமாகத் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியக் கடற்படை, தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வில்லை. கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது. தமிழக மீனவர்களின் உரிமைநலன்களைப் பறிக்கின்ற வகையில், 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. அதற்காக, இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை.

இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். 'கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றம், அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்நிலையில், தற்போது, கச்சத்தீவு அருகே, இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளது; நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தி உள்ளனர். 45 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு, இயந்திரப் படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

கச்சத்தீவு அருகே சீனப் படகுகளும், இலங்கைப் போர்க்கப்பலில் சீன வீரர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும், இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டு உள்ள அச்சுறுத்தல் ஆகும். போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு முன்னோட்ட எச்சரிக்கையே ஆகும்.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்; இலங்கைப் போர்க்கப்பல்கள் அகற்றப்பட வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+