ஹெட்லியை ஒரு வருடம் எங்களிடம் கொடுங்க: அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை

மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தானிய அமெரிக்கரான
லக்ஷ்கர் இ தொய்பா தீவிராதி டேவிட் ஹெட்லியை நாடு கடத்த அமெரிக்கா மறுத்துவிட்டது. இதையடுத்து விசாரணைக்காக ஹெட்லியை ஒரு ஆண்டு காலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய-அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை வாஷிங்டனில் கடந்த மாதம் நடந்தது. அப்போது தான் இந்தியா அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது என்று அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹெட்லியின் நண்பனான ராணாவையும் அனுப்பி வைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2008 மும்பை தாக்குதல் குறித்து ஹெட்லியிடம் விசாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்க இரண்டாவது முறையாக அனுமதி அளிக்கவிருக்கிறது. ஆனால் டென்மார்க் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டது குறித்து அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட ராணாவை விசாரிக்க இதுவரை இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ராணாவிடம் விசாரித்தால் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று இந்திய விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications