நெஞ்சு இருக்கும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன்- கருணாநிதி

கருணாநிதி எழுதியஎழுதிய நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகத்தின் முதல் பதிப்பு மற்றும் சிறுகதைப் பூங்கா ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். முதல் பிரதியை பேராசிரியர் மா.நன்னன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திமுகவினர் மேடையில் கருணாநிதியிடம் பணம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கருணாநிதி ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், நான் ஆற்ற இருப்பது ஏற்புரை அல்ல, ஏய்ப்புரை, கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளால் நான் களைத்து போய் உள்ளேன். நீங்களும் களைத்து போய் இருப்பதால், உங்களை மேலும் களைப்படைய வைக்க விரும்பவில்லை. இந்த விழாவில் நெஞ்சுக்கு நீதி புத்தகமும், சிறுகதைப் பூங்கா ஆகிய இரண்டு புத்தகங்களும் தலா 144 வீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 700 வசூலாகி உள்ளது.
அச்சகத்திற்கு, விற்பனையாளர்களுக்கு போக மிச்சம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பத்திரிகை மூலம் வெளியிடப்படும். இந்த விழாவில் புத்தகத்தை எழுதிய என்னை பாராட்டி பலர் பேசி உள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தற்போது 5-ம் பாகத்தை நிறைவு செய்து வெளியிட்டுள்ளேன். 6-ம் பாகம் எழுதப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் நீங்கள் போராட வேண்டும். 6-ம்பாகம் கண்டிப்பாக வரும்.
தற்போது வெளியான புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பேராசிரியர் நன்னன் தெரிவித்தார். சில கருத்துகள், எண்ணங்கள் ஆய்வு செய்து எதிர்காலத்தில் அடுத்த வெளியீட்டில் திருத்தி அமைக்கப்படும்.
கடந்த 1924ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு வரை நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் நிறைவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் கடந்த 1969ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை நிறைவு செய்யப்பட்டு 586 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.
3ம் பாகம் 1976ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை நிறைவு செய்யப்பட்டு 615 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது. 4ம் பாகம் 1989ம் ஆண்டு முதல் 1995 வரை நிறைவு செய்யப்பட்டு 630 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது. 4 பாகம் வரை மொத்தம் 2,586 பக்கங்கள் கொண்டவை.
1996 முதல் 1999 வரை 5ம் பாகம் நிறைவு செய்யப்பட்டு 1030 பக்க நூலாக வெளியிடப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி எல்லா பாகங்களும் சேர்த்து மொத்தம் 3,816 பக்கங்களாகும். நெஞ்சு இருக்கும் வரை நீதி நிலைக்கும் வரை எழுதி கொண்டே இருப்பேன்.
என்னை வாழ்த்தியது போல், நீங்களும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதுடன், நாம் ஒற்றுமையாக இருந்து சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நன்னனை பொறுத்த வரையில் பெரியார் காலம் தொட்டு சகோதர உணர்வோடு பழகி வருபவர், அவரது மனதில் இருந்தே, மனப்புழுக்கத்துடன் கருத்து வெளியாகி உள்ளது. அவரது காலத்திலே ஒற்றுமை உணர்வோடு இயக்கத்தை வழிநடத்துவோம் என்று உறுதி கூறுகிறேன். ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறுவோம் என்று உறுதி அளிக்கிறேன். அண்ணாவின் தம்பியாக, கருணாநிதியின் நண்பனாக இருந்து ஒற்றுமை செய்வோம் என்ற உறுதியை உலகத்துக்கு எடுத்துச்சொல்வோம்
கவிதை, கட்டுரை போன்றவற்றை நான் எழுதும்போது சந்தேகம் இருந்தால் நன்னனிடம் கேட்டு திருத்தம் செய்வேன். கவிஞர் வைரமுத்து, பிறந்த நாள் விழாவில் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகனை பொறுத்தவரை தவறுகள் இருந்தால் திருத்தம் செய்வார். ஆனால் 2 புத்தகங்கள் வெளியிடும்போது நெஞ்சுக்கு நீதியை மட்டும் குறிப்பிட்டு, சிறுகதை பூங்காவை விட்டுவிட்டார். வரவேற்புரையில் கவனமாக இருத்தல் வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications