ஜெயலலிதா இன்று ஸ்ரீரங்கம் வருகை: புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீரங்கம் மேலச்சித்திரை வீதி - தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது.
இந்த விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். உயர்க் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், தொழிற்துறை அமைச்சர் தங்கமணி, கதர்துறை அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மொண்டிப்பட்டி ஊராட்சியில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் டிஎன்பிஎல் மூலம் அமைக்கப்படும் காகித அட்டை தொழிற்சாலை, ரூ.128 கோடியில் சேதுராப்பட்டியில் அமைய உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஐடி), ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் தொக்குடியில் அமைக்கப்படும் மூலிகைப் பண்ணை உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் ஸ்ரீரங்கத்தில் அம்மா உணவகம், தேசிய சட்டப்பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட நிறைவு பெற்றுள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேச உள்ளார்.
இதன் மூலம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வரான பின்னர் 4வது முறையாக தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications