என் இனிய ‘குடி’மக்களே... உங்கள் பாசத்துக்குரிய விஞ்ஞானிகள் புதுசா ஒரு ‘ட்ரக்’ கண்டுபிடிச்சிருக்காங்க
லண்டன்: 61 சதவீதம் வரை மது அருந்துதலைக் கட்டுப்படுத்தும் மருந்து ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருதல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல... ‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியம் என்ற, குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு' என்ற பழமொழிகளே குடியை மறக்க வைத்தல் எவ்வளவு கடினமான காரியம் என்பதை புரிய வைக்கும்.
புலி வால் பிடித்த கதையாக, குடிப்பழக்கத்தினால் அவதியுறுபவர்களை காப்பாற்ற புதிய மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள். இதன்மூலம், 61 சதவீதம் வரை மது அருந்தும் பழக்கம் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குடிமகனே... நல்ல குடிமகனே
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து வருகிறது. மது அருந்துவதால், சம்பந்தப்பட்டவர்களின் உடல் நிலை மோசமாவதோடு மட்டுமின்றி, விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் போன்றவைகளும் நிகழ்கின்றன.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு....
மதுபானக்கடை, குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற கிக்கான தலைப்புகளில் படம் எடுத்து குடிமக்களை உசுப்பி விடுவதில் சினிமாவிற்கும் முக்கிய பங்குள்ளது.

சரக்கு வச்சிருக்கேன்...
இந்தியாவிலேயே மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான் என புள்ளிவிவரம் சொல்கிறது. 13 வயது சிறுவர்கள் கூட இங்கு ‘குடி'மகன்களாக உலா வரும் அவலம் நீடிக்கிறது.

நீ சர்க்கு... நா ஊறுகாய்....
தமிழகத்தில் மட்டும் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டுமாம். அதிலும், 20 விழுக்காடு மக்கள் ‘புலி வால் பிடித்த கதையாகத்தான வாழ்கிறார்களாம்...

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நா...
தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

விபத்துகள் அதிகம்...
மிக அதிகமான அளவில் சாலை விபத்துகள் நிகழும் மாநிலமும் தமிழகம் தான். சராசரியாக ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளில், 60 சதவீத சாலை இறப்புகளுக்கு காரணம் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதே....

சிங்காரி சரக்கு... நல்ல சரக்கு
மதுபான விற்பனையால்,ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்கு சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்...
கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்களாம். குடியால் குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. இந்தியாவின் விவாகரத்து பட்டியலில் தமிழ் நாடு முதல் இடம்.

மாயமில்லை... மந்திரமில்லை...
குடியினால் உடல், குடும்பம் மற்றும் சமூகம் என அனைத்தையும் பாழ்படுத்தும் குடிமகன்களை திருத்துவது எப்படி என்ற விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சியின் பலனே, இந்த மாத்திரைகள். இந்த மருந்து தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இந்த மருந்து, இங்கிலாந்து அரசின் ஒப்புதலுடன், விற்பனைக்கு வந்துள்ளது.

பக்கவிளைவுகள் இல்லாதது...
மாத்திரை வடிவில் வெளியிடப்பட்டுள்ள இதற்கு, "செலின்க்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், ஒரு நாளைக்கு, ஒரு மாத்திரை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை மது அருந்துவதற்கான பழக்கத்தில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications