குமரியில் வெங்கடாஜலபதி கோயில்: பூமி பூஜை விழாவில் பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்திற்கான பூமி பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்தா கேந்திரத்தில் 5.5 ஏக்கர் பரப்பில் ரூ.22.5 கோடியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில் கட்டப்படுகிறது. இதற்கான நிலத்தை விவேகானந்த கேந்திரம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஸ்ரீவெங்கடேசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் சன்னிதானங்களுடன், கோசாலை, வேதபாடசாலை, புஷ்கரணி, திருமண மண்டபம் போன்ற எல்லா வசதிகளோடு இங்கு ஆலயம் அமைக்கப்பட உள்ளது. இந்த கோயிலில் தெப்பக்குளம் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் வசதியும் அமைக்கப்படுகின்றது. மேலும், திருப்பதி கோயிலைப் போலவே தெப்பத்திருவிழா உள்பட அனைத்து விழாக்களும் நடத்தப்படும்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்படும் இடத்தை திருப்பதிபுரம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இக் கோயில் 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்கான பூமி பூஜை நேற்று காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜையுடன் தொடங்கியது. பின்பு, கணபதிஹோமம், வாஸ்துபூஜை நடந்தது. 6.37 மணிக்கு பூமி பூஜை நடந்தது. நவரத்தினம், பஞ்ச உலோகம், நவதானியம் ஆகியவை பூமியில் வைத்து திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்த ஆச்சாரியார்கள் பூஜை நடத்தினர்.

பூஜையில், திருப்பதி தேவஸ்தான சேர்மன் ஸ்ரீகணுமுரு பாபிராஜி எம்.பி., திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை ஆலோசனை குழுமம் தலைவர் அனந்தகுமார் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை நடந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவதானியம், பூக்கள் போட்டு வணங்கினர். பூஜைக்கு வந்த பக்தர்களுக்கு லட்டு, கயிறு போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications