சரி விடுங்க, லாலு ஜெயிச்சுட்டார், அவ்வளவுதான்.. நிதீஷ் ஒப்புதல்

பீகார் மாநிலம் மகாராஜ்கன்ச் லோக்சபா இடைத் தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பெரும் தோல்வியைச் சந்தித்து நிதீஷை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நிதீஷின் அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவின் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார் நிதீஷ். அவர் கூறுகையில், மிகவும் அடக்கமாக, அமைதியாக, லாலு பிரசாத்யாதவ் வென்று விட்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் நிதீஷ். வேறு கருத்தை அவர் தெரிவிக்கவில்லை.
நிதீஷ் கட்சியின் தோல்விக்கு நிதீஷின் அரசியல் அராஜகம்தான் காரணம் என பாஜகவினர் கூறுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டணிக் கட்சியான பாஜகவை மதிப்பதில்லை நிதீஷ். பிரசாரத்துக்குக் கூட பாஜக தலைவர்களை அவர் முறைப்படி கூப்பிடவில்லை. இந்த அராஜகப் போக்குதான் அவரது கட்சியின் படு தோல்விக்குக் காரணம் என்றனர் அவர்கள்.
அதேசமயம், மகாராஜ்கன்ச் தொகுதி எப்போதும் லாலு கட்சிக்கு ஆதரவானது என்பதையும் நிதீஷ் குமார் சுட்டிக் காட்டத் தவறவில்லை.இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தத் தொகுதியில் எம்.பியாக இருந்தவர் எங்களது கட்சியைச் சேர்ந்தவரில்லை. அவர் லாலு கட்சியைச் சேர்ந்தவர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது என்றார் நிதீஷ்.
மேலும் அவர்கூறுகையில், இந்த தோல்வியால் பாஜகவுடனான உறவிலோ, அல்லது கூட்டணியிலோ பாதிப்பு ஏதும் வராது, தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.












Click it and Unblock the Notifications