ஆமாம், ஐபிஎல் போட்டிகளின்போது பெட்டிங் கட்டினேன்: ராஜ் குந்த்ரா ஒப்புதல்

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக பாலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது வியாபார பார்ட்னரும், நண்பருமான உமேஷ் கோயன்கா ஆகியோரை டெல்லி போலீசார் நேற்று சுமார் 12 மணிநேரம் விசாரித்தனர். அப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய போட்டிகளின்போது பெட் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். அவர் பெட் கட்டி ஏகப்பட்ட பணத்தை இழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தனது நண்பரும், தரகருமான உமேஷ் மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குந்த்ராவுக்கு ராஜஸ்தான் அணியில் 11.7 சதவீத பங்குகள் உள்ளது. அவர் பிக்ஸிங்கில் அல்ல பெட்டிங்கில் தான் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரிடமும் இன்றும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குந்த்ராவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக பெட்டிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ குருநாத் மெய்யப்பன், நடிகர் வின்து தாரா சிங் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications