கார் விபத்தில் மாணவன் பலி: மதுபான ஆலை அதிபர் மகன் ஷாஜி மலேஷியாவில் கைது
சென்னை: சென்னையில் கார் விபத்தில் சிறுவன் மரணத்திற்கு காரணமாக வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் மதுபான ஆலை உரிமையாளர் மகன் ஷாஜி மலேஷியாவில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை உடனடியாக சென்னைக்கு அழைத்துவந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே கடந்த மாதம் 22ஆம் தேதி தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதியது. இதில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுபரக் ஷிதா, முனிராஜ், அமைந்தகரை சேர்ந்த ராஜாமொய்தீன், மயிலாப்பூரை சேர்ந்த மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், சிறுவன் முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காரில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களுடன் வந்த எம்.பி. டிஸ்லரீஸ் என்ற மதுபான ஆலை உரிமையாளர் புருஷோத்தமன் மகன் ஷாஜி தப்பிவிட்டார். டிரைவர் குமார் என்பவர் காரை ஓட்டியதாக அவர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை விடுவித்தனர்.
இந்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட டிரைவர் குமார் உண்மையில் ஷாஜியின் டிரைவர் கிடையாது என்ற தகவல் வெளியானது. புருஷோத்தமன் மகன் ஷாஜி என்பவர்தான் காரை ஓட்டியதாகவும், அவரை காப்பாற்ற, குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு வந்த தகவலையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
ஷாஜிக்கு வலைவீச்சு
இதனிடையே விபத்து நடந்த காரில் எம்.பி டிஸ்ட்லரிஸ் ஷாஜியுடன், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் நெருங்கிய உறவினர் ஒருவரும் உள்ளே இருந்துள்ளார். தலைமறைவான ஷாஜியை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலேஷியாவில் இருந்தபடியே ஷாஜி வங்கியில் பணம் எடுத்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஷாஜியை கைது செய்ய இன்டர்போல் உதவியை சென்னை போலீசார் நாடினர்.
இதைத் தொடர்ந்து இன்டர்போல் போலீசார் ஷாஜியை நேற்று கைது செய்தனர். இது குறித்து உடனடியாக சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மலேஷியா சென்று ஷாஜியை சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
ரூ.345 கோடி மோசடி
இதனிடையே, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக ரூ.345 கோடி கடன் பெற்று ஏமாற்றியதாக மலேஷியாவில் ஷாஜி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications