தென்காசி அருகே நில அதிர்வு: விடிய விடிய வீதியில் தூங்கிய மக்கள்
சென்னை: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. பின்னர் தான் அது நில அதிர்வு என்று ரஹ்மானியாபுரம் கிராம மக்களுக்கு தெரியவந்தது. ஜாகீர் உசேன் நகர், வாவாநகரம், அச்சன்புதூர், கொருவன் சாலை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு அலறியடித்து வெளியேறினர். சில நிமிடங்களில் இயல்பு நிலை திரும்பியது எனினும் மீண்டும் நில அதிர்வு ஏற்படலாம் என்ற அச்சத்தில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள் இரவு முழுவதும் அவர்கள் தூக்கமல் இல்லாமல் தவித்தனர்.
இதே பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பும் நில அதிர்வு ஏற்பட்டது. தற்போது இந்த பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் புவியியல் ஆராய்ச்சியாளர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி ஆர்.டி.ஓ. ரமேஷ், வடகரை, அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.















Click it and Unblock the Notifications