சென்னை பயங்கரம்: 2 மகள்களை கொலை செய்த தந்தை தூக்குப் போட்டு தற்கொலை!
பெரம்பூர்: வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியினால் சென்னையில் தொழிலாளி ஒருவர் தனது 2 மகள்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, பெரம்பூரை அடுத்த, சூளை தட்டான்குளம், ஷேக்மோகன்லால் சவுத்ரி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது38). இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு பவித்ரா (5), சந்தியா (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இவர் தனது சகோதரரின் பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார்.
மலர்விழி தனது 2 குழந்தைகளுடன் போரூர், அயப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிந்தார். நேற்று மாலை பார்த்திபன் தனது மனைவி-மகள்களை அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் தனது பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.
சில தினங்களாகவே சோகமாக இருந்த பார்த்தீபன் நேற்று இரவு நீண்ட நேரம் மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்னர் சுவிட் ஆப் செய்து விட்டார். கணவரின் போனுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் போகவே மாமியாரிடம் தொடர்பு கொண்டு பேசிய மலர்விழி வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறினார்.
உடனே பார்த்திபனின் தாயார் அங்கு வந்து பார்த்த போது பார்த்திபன் வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரது மகள்கள் பவித்ரா, சந்தியா இருவரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரூபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பார்த்திபன் வீட்டில் விஷம் கலந்த குளிர்பானம் சிதறி கிடந்தது. சடலங்களை கைப்பற்றி விசாரித்த போது 2 குழந்தைகளின் கழுத்தும் நெரிக்கப்பட்டு இருந்தது.
பார்த்திபன் தனது குழந்தைகளை கொல்வதற்கு முதலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் எனவும், அதில் இருவரது உயிரும் பிரியாததால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம். பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதுகுறித்து பார்த்திபனின் மனைவி மலர்விழி கூறியதாவது: ''எனது கணவர் அவரது தம்பி சீனிவாசனின் பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார். தனக்கு தனியாக பியூட்டி பார்லர் மற்றும் சலூன் கடை வைத்து தருமாறு கூறினார். இதுபற்றி எனது கணவர், அவரது தம்பி, எனது மாமியார் ஆகியோர் ஒன்றாக பேசினார்கள். இதில் தீர்வு ஏற்படவில்லை. வீட்டுக்கு திரும்பிய எனது கணவர் தன்னை எல்லோரும் ஏமாற்றி விட்டதாக கூறினார்.
இந்த நிலையில் நான் குழந்தைகளுடன் எனது தாய் வீட்டுக்கு சென்றேன். பின்னர் அவர் வந்து என்னை பஸ்சில் வருமாறு கூறி விட்டு குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். இதற்கிடையே எனது கணவரும், குழந்தைகளும் இறந்து விட்டதாக போன் வந்தது. பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தேன். அவர் எதற்காக குழந்தைகளை கொன்று தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை'' என்று கூறி கதறி அழுதார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications