கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு எதிராக ஆபாச சி.டி.: சுப.உதயகுமார் புகார்
நெல்லை: கூடங்குளம் போராட்டக் குழுவிற்கு எதிராக வெளியான ஆபாச சிடியை வினியோகம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்கு குழு தலைவர் சுப. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் குறிப்பாக இடிந்தகரையில் கடந்த 22 மாதங்களாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு தபால் மூலம் மர்ம நபர்கள் சி.டி.யை அனுப்பியுள்ளனர்.
அதில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெண்களிடம் அருவருப்பகவும், இரட்டை அர்த்தம் கொண்ட தொனியில் பேசுவது போன்றும் காட்சிகள் அமைந்துள்ளது. தபால் முத்திரை இல்லாமல் இந்த சி.டி. பார்சலை தபால் ஊழியர்கள் சிலரே பல பகுதிகளில் வினியோகம் செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த சி.டி. காட்சியைப் பார்த்து போராட்டக் குழுவினர் மட்டும் இன்றி, கூடங்குளம் மற்றும் இடிந்தகரை கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சுப.உதயகுமார் நெல்லை மாவட்ட முதுநிலை தபால் கோட்ட கண்கானிப்பாளருக்கு ஒரு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கூடங்குளம், இடிந்தகரையைச் சேர்ந்த மக்களுக்கு முத்திரை இல்லாத தபால்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதே போன்ற ஒரு கடிதத்தை எங்களுக்கும் இடிந்தகரையைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர் கொடுத்தார். அதில் எந்த தபால் நிலையத்தின் முத்திரையும் இல்லை.
ஆனால், அதில் இருந்த சி.டி.யில் எங்கள் போராட்டக்குழு நிர்வாகிகளை அவமானப்படுத்தும் விதத்தில் திட்டமிட்டு யாரோ அவதூறாக பேசி தயாரிக்கப்பட்ட பதிவு இடம் பெற்றுள்ளது.
தபால் அலுவலக முத்திரை இல்லாமல் அதனை விநியோகித்த தபால் ஊழியர் மீது உடனே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த சி.டி. சம்பவம் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications