இலங்கை பிரச்சனையில் ஜெயலலிதா போடாத இரட்டை வேடமா?: கருணாநிதி கேள்வி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள மற்ற உணர்வுகளை திமுக மதிக்கின்றது. இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது பற்றி திமுக உணர்வும் அது தான். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி, இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்து விட்டு, இப்போது மீறுவது மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
இலங்கைப் பிரச்னையில், மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார். இதே இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதா போடாத இரட்டை வேடமா?
16.4.2002ல் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்தார். இந்திய அரசு இலங்கையின் அனுமதியுடன் படையை அனுப்பி, பிரபாகரனை சிறைப் பிடிக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாரே.. அது இரட்டை வேடம் இல்லையா?
அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தபோது, இறுதிப் போர் நேரத்தில் ராஜபட்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப் புலிகளை எதிர்த்துதான் என்றாரே அது இரட்டை வேடம் இல்லையா?
17.1.2009ல் இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றாரே.. அது இரட்டை வேடமா? கபட நாடகமா?
இவ்வளவையும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செய்துவிட்டு தற்போது மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக கடிதம் எழுதியிருக்கிறார். அதே நேரம், ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என போராடிய 136 பேரை அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. கடிதத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் உண்மையா? போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்தது உண்மையா? எது இரட்டை வேடம் என ஜெயலலிதா விளக்குவாரா?
மேலும், இந்த அறிக்கை மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலே தவிர, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நியாயப்படுத்துவதாக அர்த்தம் ஆகாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications