அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளர் மீது மோசடி புகார்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயபுரத்தில் உள்ள காசிபுரம் ஏழாவது தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னை ராயபுரம் பகுதி அதிமுக மாணவரணி தலைவராக இருந்தேன். தற்போது அந்த பதிவியில் நான் இல்லை. ஆனால் கட்சியில் உறுப்பினராக நீடிக்கின்றேன். எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் என்னை அணுகி தமிழக அரசு பணியில் சேர்த்து விடுமாறு கூறினர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகத்திடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மின் வாரியம் மற்றும் சில அரசு பணிகளில் சேர்த்துவிட ரூ.14 லட்ச ரூபாய் ரொக்கமாக கொடுத்தேன். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட ஆறுமுகம் தான் கூறியபடி வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இது குறித்து ஆறுமுகத்திடம் கேட்டபோது பணத்தை தர முடியாது. முடிந்தால் உன்னால் பணத்தை வாங்கிக் கொள் என கொலை மிரட்டல் விடுத்தார்.
எனவே, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதோடு, பணத்தை திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்த ஆறமுகம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆறுமுகம் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications