மேற்கு வங்கத்தில் 14 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை: ஒருவர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவியை கும்பல் பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாடியா மாவட்டம் உத்தர்பரா கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 7ம் வகுப்பு படித்து வந்தாள். திங்கட்கிழமையன்று பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவி, மழை பெய்யவே அருகே உள்ள தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்றிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிமல் சர்தார் (22) என்ற வாலிபர் குடையுடன் வந்து சிறுமியை அழைத்துள்ளார்.
தெரிந்தவர் என்பதால் பிமலுடன் சென்றார் மாணவி. அப்போது பிமல் தனது நண்பர்கள் 2 பேருக்கு போன் செய்து வரவழைத்தார். மூவரும் சேர்ந்து மாணவியை, ஒரு புதருக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பிவிட்டனர்.
இதற்கிடையில், மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியான குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலையில், புதரில் மாணவியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. ஊர் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் சிலர், கடைசியாக மாணவியை பிமலுடன் பார்த்ததாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பிமலை பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், மாணவியை கொன்றதை பிமல் ஒப்புக் கொண்டார். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா அருகே, கல்லூரி சென்று திரும்பிய 20 வயது மாணவி 4 பேர் கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து கொல்கத்தாவில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தற்போது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications