இன்றும் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்த காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம்

தமிழகத்தில் சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 192 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்காக காவிரி மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மத்திய நீர் வளத்துறை செயலாளர் எஸ்.கே.சர்க்கார் நியமிக்கப்பட்டார்.
காவிரி மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 1ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பிரதிநிதிகள் காவிரி நீரை திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கர்நாடகாவில் பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் அக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் இன்று டெல்லியில் உள்ள ஸ்ராம் சக்தி பவனில் நடந்தது. இதில் தமிழக அரசின் சார்பில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப் பணித்துறை செயலாளர் சாய்குமார், கர்நாடக தலைமை செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், கேரள தலைமை செயலாளர் பாரத் பூஷண், புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் சேட்டன் பி.சங்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட வேண்டி உள்ளதால் காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு இந்த மாதம் வழங்க வேண்டிய 10 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு தமிழக அரசு சார்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சுமார் 2 மணிநேரம் நடந்த இன்றைய கூட்டத்திலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக இம்மாத இறுதியில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications