ராஜ்யசபா தேர்தல்: 6 இடங்களும் அதிமுக வசமாகுமா? கணக்கு போடும் கட்சிகள்-பரபரப்புக் காட்சிகள்!
டெல்லி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்.பி தேர்தலில் 6 இடங்களையும் அதிமுகவே கைப்பற்றுமா கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்ப கணக்குப் போட்டு கட்சிகள் காய் நகர்த்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிற்கு தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. சார்பில் டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்தினவேல், டாக்டர் லட்சுமணன், எஸ்.சரவணபெருமாள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஜெயலலிதா ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 இடங்களுக்கும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு விட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 151 பேர் உள்ளனர். தலா 34 பேர் வீதம் 136 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து டெல்லி மேல் சபைக்கு 4 எம்.பி.க்களை தேர்வு செய்து விடுவார்கள். இதன்பிறகு அ.தி.மு.க. வுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் மீதம் இருப்பார்கள். அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் 5-வது வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டுமானால் மேலும் 19 ஓட்டுகள் தேவைப்படும்.

கட்சிகள் போடும் கணக்கு
மொத்தம் அதிமுக 151, சி.பி.எம். 10, சி.பி.ஐ 8, அதிருப்தி தேமுதிக 6, மனிதநேய மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, பார்வார்டு பிளாக் 1, சமக 2 என இப்போதே 182 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

6 சீட்டுகள் கிடைக்குமா?
இந்த 182 எம்.எல்.ஏக்கள் தலா 30 பேராக பிரிந்து வாக்களித்தால் வெற்றி நிச்சயம் என்கின்றனர். ஒரு எம்.பி பதவிக்கு 34 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில் அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம். அதன்படி 6 எம்.பிக்களும் அதிமுக அணிக்கே என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

திமுகவில் போராட்டம்
திமுகவில் கனிமொழியை எம்.பியாக்க குறைந்த பட்சம் 32 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில் 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுகவுக்கு காங்கிரசின் ஆதரவு கிடைத்தாலும் 28 பேர்தான் உள்ளனர். எனவே அதிமுக அணியில் இருந்து சிறிய கட்சிகளை இழுக்கும் திட்டத்தில் திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிக நிலை
இதில் அதிகம் குழப்பத்தில் இருப்பது தேமுதிக தான். ஏனெனில் இந்த கட்சியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் தாவ முடிவெடுத்துள்ளதால் அதை தடுக்க எம்.எல்.ஏக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தும் முடிவில் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது.

குதிரை பேரம் நடக்குமா?
ராஜ்யசபா தேர்தலை ஒட்டி குதிரை பேரங்கள் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுக்கு நிச்சயம் ஒரு எம்.பி. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு அ.தி.மு.க.வின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

8 பேருக்கு பதில்?
ஒருவேளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க முடியாது என்ற நிலையை எடுத்தால் அந்த இடத்தை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் நிரப்புவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ ராஜ்யசபா தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்களில் அது தொடர்பான பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications