பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு: 21ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் அபினேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேர இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 397 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 5ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை வெளியிடப்பட்டது. பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்டார்.
இதில் பொது பிரிவில் நாமக்கல்லைச் சேர்ந்த அபினேஷ் குமார் முதலிடம் பிடித்தார். பரணீதரன் என்பவர் 2வது இடத்தை பிடித்தார். தொழிற்பிரிவில் கவுதம் முதலிடத்தையும், ஆனந்த் மற்றும் கவுசிக் ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களையும் பெற்றனர்.
தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu பார்க்கலாம். பொறியியல் படிப்பில் முதலில் விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 20ம் தேதியும் நடைபெறுகிறது. பொது கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவங்கி ஜூலை மாதம் 30ம் தேதி வரை நடக்கும்.












Click it and Unblock the Notifications