நெல்சன் மண்டேலா கவலைக்கிடம்: தென்னாப்பிரிக்க அரசு அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு(94) நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரின் உடல் நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மண்டேலாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் குழுவை தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மண்டேலா குணமடைய அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மண்டேலாவின் மகள்கள் மகாசிவி மற்றும் ஜின்ட்ஸி, முன்னாள் மனைவி வின்னி ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தனர். மண்டேலாவின் தற்போதைய மனைவி கிரகா தனது லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு கணவரை கவனித்து வருகிறார். மேலும் அவரை அவரது உறவினர்களும் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 4 முறை மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications