நாளை தெலுங்கானா போராட்டம்.. இன்றும் நாளையும் ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு!
ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி நாளை சட்டசபை நோக்கி பேரணி நடத்துவதாக தெலுங்கானா போராட்டக் குழு அறிவித்திருப்பதால் ஹைதராபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனி தெலுங்கானா கோரி தெலுங்கானா போராட்டக் குழுவின் நாளைய சட்டசபை நோக்கிய பேரணிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். நாளைய பேரணியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறியுள்ளார்.
இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஹைதராபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவு இன்றும் நாளையும் அமலில் இருக்கும். மேலும் மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலீசார் நகரில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தடையை மீறி சாலையில் கூடுபவர்களை விரட்டியடிக்கின்றனர். தெலுங்கானா போராட்டக்காரர்கள் பலர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைதாகி உள்ளனர்.
இதனிடையே தனி தெலுங்கானா போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஹைதராபாத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முயன்றனர். பல்கலைக்கழக வாசலில் இருந்து புறப்பட்ட அவர்களை வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆவேசம் அடைந்த மாணவர்கள் போலீசார் மீது கற்களை வீசினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினார். மேலும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டது.
தெலுங்கானா விவகாரம் மீண்டும் வெடித்திருப்பதால் ஹைதராபாத் நகரத்தில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications