லோக்சபா தேர்தல்.. உத்தரபிரதேச மாநிலத்தை குறிவைக்கும் நரேந்திர மோடி!

பாஜகவின் அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நரேந்திர மோடிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் 2014 லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் பாஜக எதிர்கொள்கிறது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிலைபடுத்தக் கூடும்.
இந்நிலையில் நரேந்திர மோடி தமது தேர்தல் பணியை உடனடியாக தொடங்கி விட்டார். நரேந்திர மோடி கட்சியின் ஆட்சி மன்ற குழுவில் ஏற்கனவே இடம் பிடித்துவிட்டார். அவரது ஆதரவாளரும், குஜராத் முன்னாள் அமைச்சருமான அமித்ஷா உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். அமித்ஷா நேற்று லக்னோ சென்று மாநில கட்சி அலுவலகத்தில் மேலிட பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். லக்னோவில் அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லக்னோ கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் இருந்தனர். இதற்கு முன் லக்னோ கட்சி அலுவலகத்தில் வாஜ்பாய், அத்வானி படங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெரிதாக வைக்கப்பட்டு இருக்கும். தற்போது நரேந்திரமோடி படங்கள் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளன. நரேந்திரமோடி தனது ஆதரவாளரான அமித் ஷாவை உ.பி. மாநில பொறுப்பாளராக நியமித்து இருப்பதன் மூலம் அங்கிருந்து அவர் தனது தேர்தல் பணியை தொடங்க திட்ட மிட்டு இருப்பது தெரிய வருகிறது.
உத்தர பிரதேசம் பெரிய மாநிலம் என்பதால் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த மாநிலத்தை குறி வைப்பது வழக்கம். இங்கு அதிக எம்.பிக்கள் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது அரசியல் கட்சிகள் கணக்கு. இம்மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை தனித்தனியே நிற்கின்றன. பாஜகவுக்கு கடந்த சட்டசபை தேர்தலில் 4வது இடம்தான் கிடைத்தது. இந்நிலையில்தான் உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றுவதற்காக அமித்ஷாவை களமிறக்கி தமது தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் நரேந்திர மோடி!












Click it and Unblock the Notifications