மக்களுக்காக சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம்: பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமாரின் மகள் ருசிதாஸ்ரீயின் பூப்புனித நீராட்டு விழா ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மஹாலில் நடந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விழாவை நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தேமுதிக என்பது ஒரு கட்சி அல்ல மாறாக ஒரு குடும்பம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அன்பு, பாசத்திற்கு அப்பாற்பட்டு யாராலும் தேமுதிகவை அசைத்துவிட முடியாது. தேமுதிக நேற்று வந்த கட்சி என்று நினைக்க வேண்டாம். விஜயகாந்தின் பார்வையில் 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றம் என்ற சிறு செடியாய் வளர்ந்து இன்று ஆலவிருட்சமாக நிற்கிறது. திருப்பூர் ஆர்ப்பாட்டம் தேமுதிகவுக்கு ஒரு திருப்புமுனை.
நான் எங்கேயும் தனிப்பட்ட யாரையும் தாக்கி பேச மாட்டேன். அப்படி தனிப்பட நபரை தாக்கிப்பேசி ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆளுங்கட்சியில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டுவது அரசியல் கட்சியின் கடமை ஆகும். அந்த கடமையைத் தான் நாங்கள் செய்கிறோம். மக்கள் பிரச்சனையைப் பற்றியே பேசுகிறோம்.
தேர்தல் நேரத்தில் நாங்கள் விலைவாசியை குறைப்போம், தமிழகத்தை மின்வெட்டு இல்லா மாநிலமாக்குவோம், வேலை வாயப்பை பெருக்குவோம் என்று முதல்வர் வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்த பிறகும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதை நாங்கள் கூறினால் வழக்கு போடுகிறார்கள். அந்த வழக்குகளை சந்திக்க தேமுதிக தயாராக உள்ளது.
மக்களுக்காக ஒன்றல்ல ஒரு லட்சம் வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களுக்காக சிறைக்கு செல்லவும் தயாராகவே இருக்கிறோம். 29 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவால் வெற்றி பெற்றனர் என்கிறார்கள். ஆனால் 151 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேமுதிகவால் தான் கிடைத்தார்கள் என்பதை உணர வேண்டும்.
அதிமுகவுக்கு தேமுதிக சிம்மசொப்பனமாக உள்ளது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக பேசுகிறார்கள். அவர்களின் 7 ஓட்டுகள் தான் போயுள்ளனவே தவிர 7 கோடி மக்களின் அன்பு எங்களுக்கு உள்ளது.
தமிழக அரசியலில் துரோகிகளுக்கு என்றுமே வரலாறு இருந்ததில்லை. தற்போது மாநிலங்களவை தேர்தலையொட்டி ஒரு எம்.பி. கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டணிக்கு அலைவதாக பேசுகிறார்கள். எங்களுக்கு எம்.பி. பதவி லட்சியமே இல்லை. மாநிலங்களவை தேர்தல் குறித்தும், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை சந்தித்தது குறித்தும் விஜயகாந்த் இன்னும் 15 நாட்களில் முக்கிய முடிவை அறிவிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications