ஹெராயின் வழக்கு: நீதிபதிக்கு மீண்டும் மர்ம கடிதம்... சுதாகரன் வழக்கை விசாரிப்பதில் சிக்கல்

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும் சசிகலாவின் அக்காள் மகனுமான சுதாகரன் வீட்டு படுக்கை அறையில் கடந்த 2001ம் ஆண்டு ஹெராயின் போதைப் பொருளை போலீசார் கண்டெடுத்தனர். இதனையடுத்து சுதாகரனுடன் அவரது நண்பர்கள் தோட்டம் பாஸ்கரன், சலாலுதீன், மொய்னுதீன் ஆகியோர் மீது, போதைப் பொருள் வழக்கு தொடரப்பட்டு, போதை பொருள் தடுப்பு முதன்மை சிறப்பு கோர்ட்டில், விசாரணை நடந்து வந்தது.
மர்ம தந்தி
பனிரெண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராமமூர்த்திக்கு, கடந்த ஏப்ரல் 29ம் தேதி, ஒரு மர்ம தந்தி வந்தது. அதில், "நீங்கள் சுதாகரனின் உறவினர். இவ்வழக்கில் நீங்கள் தீர்ப்பு வழங்கினால் ஒருதலைபட்சமாக இருக்கும். எனவே, தீர்ப்பு வழங்கக் கூடாது' என, கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இவ்வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சின்னப்பன் விசாரித்து வருகிறார்.
மர்ம கடிதம்
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மன்னார்குடி சீனிவாசன் என்ற பெயரில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி தர்மராவ், பதிவாளர் பொன். கலையரசன் ஆகியோருக்கு, மர்ம கடிதம் ஒன்று வந்தது. சுதாகரன் மீதான போதைபொருள் வழக்கை விசாரிக்கக்கூடாது என, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக்கடிதத்தின் நகல், நீதிபதி சின்னப்பனுக்கும், அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை, உயர்நீதிமன்ற முடிவுக்கு அனுப்பி வைத்து, விசாரணையை, 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி சின்னப்பன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications