குற்றங்களின் தலைநகரம் டெல்லி... சிறுவர்களும் பலாத்கார வழக்கில் கைது
பெண்களுக்கு அதிகம் பாதுகாப்பு இல்லாத நகரங்களில் இந்தியாவின் 88 முக்கிய நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தவிர மற்ற முக்கியமான 4 மெட்ரோ நகரங்களிலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டில் பாலியல் பலாத்காரங்கள் அதிகம் நடைபெற்ற நகராக டெல்லி உள்ளது. இந்த விசயத்தில் இந்தியத் தலைநகரம் குற்றங்களின் தலைநகரமாக உருவெடுத்துள்ளது.

டெல்லி தொடர்ந்து நம்பர் 1
நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பற்ற 88 நகரங்களில் டில்லியில் மட்டும் 14.88 சதவீதம் குற்றங்கள் நடைபெறுகிறது. 2012ல் டில்லியில் மட்டும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக 5959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றங்களின் தலைநகரம்
மெட்ரோ நகரங்களின் அடிப்படையில் டெல்லியில் கடந்த ஆண்டில் 706 பாலியல் பலாத்காரங்களும், மும்பை, கோல்கட்டா, பெங்களூரு மற்றும் சென்னையில் தலா 484 பாலியல் பலாத்காரங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் மற்ற நகரங்கள் நெருங்க முடியாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தலைநகராகவும் விளங்குவது டெல்லி என குற்றப்பதிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு 2
டெல்லியை தொடர்ந்து 2வது இடத்தில் பெங்களூரு உள்ளது. இங்கு 6.18 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. 3வது இடத்தில் கோல்கட்டாவும்(5.66 சதவீதம் குற்றங்கள்), 4வது இடத்தில் மும்பையும்(4.86 சதவீதம் குற்றங்கள்) உள்ளது.

அனைத்துக் குற்றங்களும் அதிகம்
டெல்லியில் 75.76 லட்சம் பெண்கள் உள்ளனர். இது மும்பையை (85.20 லட்சம்) விட குறைவு.தேசிய குற்றப்பதிவு அறிக்கையின்படி டில்லியில் 2.83 சதவீதம் அனைத்து குற்றங்களும் நடைபெறுகின்றன. யூனியன் பிரதேசங்கள், வங்காளம் ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான குற்றம் மட்டுமின்றி அனைத்து குற்றங்களும் அதிகளவில் நடைபெறுகின்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 12.67 சதவீதம் குற்றங்கள் நடைபெறுகின்றன.

கடத்தல் வழக்கு அதிகம்
டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்கள், குழந்தைகள் என கடந்தப்பட்ட வழக்குகள் 2160க்கும் மேல் பதிவாகி உள்ளன. 134 வரதட்சணை கொலைகள், கணவன் மற்றும் உறவினர்களால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் என 1985 வழக்குகள் பதிவாகி உள்ளன.

மறுக்கும் போலீஸ்
கடந்த 10 ஆண்டுகளில் டில்லியில் குற்றங்கள் அதிகரித்து வருவது உண்மை தான்; ஆனால் தேசிய குற்றப்பதிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை முற்றிலும் தவறானவை; அதிகரித்து வரும் குற்றங்களுக்கு மிக விரைவாக அதிகரித்து வரும் மக்கள் தொகை, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நகர்புறங்களில் பழக்கமில்லாதவர்களின் மாறுபட்ட நடத்தை ஆகியனவே ஆகும்; பெரும்பாலான பகுதிகளில் இரவில் தாமதமாக வீடு திரும்பும் பெண்களாலேயே குற்றங்கள் ஏற்படுகின்றன; போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு; நகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமாதானம் அதிகம்
அறிக்கை குறித்து டெல்லி அமைச்சகம் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புகார் அளிப்பதில்லை எனவும், சில சமயம் விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பேசப்படுவதாகவும், மேலும் சில வழக்குகளில் இருதரப்பினரும் சமாதானமாக போய்விடுவதாகவும் தெரிவித்துள்ளது.

குற்றவழக்கில் சிறார்கள்
டெல்லியில், 2012ஆம் ஆண்டில் கொலை வழக்கில் 100 சிறார்களும், பலாத்கார வழக்கில் 60 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2011ஆம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும், ஆனால், பீகார், மகாராஷ்டிர மாநிலங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை வெகு குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

கொலை கடத்தல்
இதில்லாமல், 74 சிறார்கள் கொலை முயற்சி வழக்கிலும், 18 பேர் ஆட்கடத்தல் வழக்கிலும், 10 பேர் பலாத்கார முயற்சி வழக்கிலும், 13 பேர் கொள்ளையடித்த வழக்கிலும் கைதாகியுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபடுவது அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில், ஆந்திரம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவை முன்னணியில் உள்ளதாக எச்சரிக்கிறது அந்த அறிக்கை.












Click it and Unblock the Notifications