மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி, 40 பேர் மாயம்
மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் படகு ஒன்று சுமார் 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை தரம்பூரில் இருந்து சார் தீவுக்கு கிளம்பியது. படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றுள்ளனர். மேலும் காற்று பலமாக வீசியதால் படகு கவிழ்ந்தது. இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணிக்கு மானிக்சக் என்ற பகுதியில் நடந்தது.
இதில் படகில் பயணம் செய்த பெண் ஒருவர் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அவர்கள் படகில் கங்கை நதியை கடந்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் இது போன்ற படகு விபத்துகள் அடிக்கடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications