பாஜக - நிதீஷ் உறவு... இந்த வாரத்தோடு கடைசி?

இந்த வார இறுதியோடு இரு கட்சிகளின் கூட்டணியும் முடிவுக்கு வரும் என்றும் பீகாரில் பேச்சு அடிபடுகிறது. நாளை பாட்னாவில் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் நிதீஷ் . அப்போது இறுதி முடிவை எடுத்து அறிவிக்கவுள்ளார்.
கடந்த 18 வருடமாக தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது ஐக்கிய ஜனதாதளம். பீகாரில் 2 வது முறையாக இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. ஆனால் இதில் நிதீஷ் குமாரின் பங்குதான் அங்கு அதிகம்.
இந்த நிலையில் நரேந்திர மோடி விவகாரம் தொடர்பாக பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளார் நிதீஷ் குமார். மேலும் மோடிக்கு தேசிய பிரசாரக் குழுத் தலைவர் பதவியை பாஜக அளித்ததும் அவரை கடுப்பாக்கி விட்டது. இதனால் பாஜக உறவே வேண்டாம் என்ற மன நிலைக்கு அவர் வந்து விட்டார்.
இதையடுத்து தேசிய அளவில் பல்வேறு தலைவர்களுடன் பேசி வரும் அவர் பீகாரிலும் பாஜக உறவை முறிக்க முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. இதனால்தான் நாளை எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி முறிவு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் கூட்டணி முறிவை நாளையே நிதீஷ் குமார் அறிவிப்பார் என்றும் தெரிகிறது. எனவே இந்த வாரத்தோடு பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதாதள கூட்டணியும், உறவும் முடியப் போகிறது என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு பீகாரில் நிலவுகிறது.
ஆனால் இந்த விவகாரம் குறித்து ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவரான சரத் யாதவ் கூறுகையில், எல்லாம் முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றார். இவருக்கும், நிதீஷ் குமாருக்கும் எப்போதும் ஒத்துப் போகாது என்பது உலகம் அறிந்த விஷயம். இருவரும் ஒரே கட்சிதான் என்றாலும் இரு வேறு திசையில்தான் இருவரும் பயணித்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில் பாஜக வேண்டாம் என்ற முடிவில் நிதீஷ் குமார் தீவிரமாகவும், உறுதியாகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வாரத்தோடு பீகாரில் இவர்களின் கூட்டணி முடிவுக்கு வருவது உறுதி என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications