தீயாய் பரவிய தெலுங்கானா போராட்டம்: சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் தற்கொலை மிரட்டல்
ஹைதராபாத்: ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், போராட்டக்குழுவினரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் சட்டசபை கட்டடத்திலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க வேண்டும் என்பது போராட்டக்குழுவினரின் கோரிக்கை. பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா கோரி இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்த போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.ஆனால் போராட்டக்காரர்கள் போர்வையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நகரில்ஊடுருவி வன்முறையில் ஈடுபடக் கூடும் என்று தகவல் கிடைத்ததால் இந்தபோராட்டத்துக்கு போலீசாரும், அரசும் அனுமதி மறுத்துவிட்டது.
144 தடை உத்தரவு
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரம் முழுவதும் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் தடையை மீறி திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடக்கும் என்று அறிவித்ததைத் அடுத்து அதனை தடுக்கும் வகையில் ஹைதராபாத்தில் மத்திய பாதுகாப்புபடை, அதிரடிப்படை உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சட்டசபைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. நகருக்கு வெளியே 58 சோதனை சாவடிகளும், நகருக்குள் 17 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டது. பைக், சைக்கிளில்களில் வந்தவர்கள் கூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.தெலுங்கானா பகுதியில் இருந்து வந்த போராட்டக் குழுவினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர்.
வீட்டுக்காவலில் தலைவர்கள்
முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.ஹைதராபாத்தில்அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.சட்டசபையை சுற்றிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
காக்கி கோட்டை போல் சட்டசபை வளாகம் காட்சி அளித்தது. இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் இன்று காலை சட்டசபை கூடியது. சபை தொடங்கியதுமே தெலுங்கானா கோரி அப்பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை கூடிய அடுத்த நிமிடமே ஒத்தி வைக்கப்பட்டது.
தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில் காவெட்டி சம்மையா மற்றும் வினய் பாஸ்கர் ஆகிய 2 டிஆர்எஸ் எம்.எல்.ஏ.க்களும் தனித்தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை கண்டித்து , ஆந்திர சட்டசபை கட்டடத்தின் மாடிக்குச் செல்லும் கதவை அடைத்து தாழ்ப்பாளை போட்டுவிட்டு, கட்டடத்தின் உச்சியில் ஏறி நின்றபடி போலீசார் கதவை உடைத்து மேலே வந்தால், குதித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஹைதராபாத் பதற்றம்
மேலும் சட்டசபை கட்டடத்தின் உச்சியில் கருப்புக்கொடியையும் அவர்கள் ஏற்றினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சட்டசபை காவலர்களும், இதர போலீசாரும் சட்டசபை கட்டடத்தின் மீது ஏறி அவர்களை கீழே கொண்டுவந்தனர்.
இது ஒருபுறம் இருக்க தடையை மீறி ஆந்திர சட்டசபையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தெலங்கானா ராஷ்ட்ர சமிதி ( டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications