பாஜகவுக்கு கெடு எதையும் நாங்கள் விதிக்கவில்லை - ஷரத் யாதவ்

பீகாரைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி உடைவது உறுதியாகி விட்டது. நாளை தனது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் நிதீஷ். அதில் பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதேசமயம் தேசிய அளவில் ஐக்கிய ஜனதாதளத்தின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் அதன் தலைவர் ஷரத் யாதவ்.
நிதீஷ் குமாருக்கும், ஷரத் யாதவுக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். என்னதான் தலைவராக யாதவ் இரு்ந்தாலும், நிதீஷ் குமார் கட்சி என்றுதான் ஐக்கிய ஜனதாதளம் பொதுவாக பார்க்கப்படுகிறது. இதுவே யாதவுக்கு பெரும் உறுத்தல்தான்.
இந்தநிலையில்தான் யாதவை வைத்து நிதீஷ் குமாருக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறது பாஜக. இதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவுக்கு சாதகமாக பேச ஆரம்பித்திருக்கிறார் யாதவ்.
பாஜக, ஐக்கிய ஜனதாதள விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், எல்லாம் முடிந்து விட்டதாகவோ, கூட்டணி முறிந்து விட்டதாகவோ கருதத் தேவையில்லை.
அத்வானி, வாஜ்பாயி போன்ற தலைவர்களின் தாக்கம் குறைகிறது என்றால் அது நிச்சயம் நல்லதற்கில்லை. அது நிச்சயம் கூட்டணியைப் பாதிக்கும்.
அத்வானியுடனான உறவு என்பது பாஜக, ஐக்கிய ஜனதாதளத்திற்கு முக்கியமானது என்று கூறியுள்ளார் யாதவ்.
கூட்டணி குறித்து காலக்கெடு எதையும் ஐக்கிய ஜனதாதளம், பாஜகவுக்கு நிர்ணயித்துள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த யாதவ், கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்தோ அல்லது வேறு விவகாரம் குறித்தோ பாஜகவுக்கு நாங்கள் காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை. இப்போதைக்கு கூட்டணி உள்ளது. அதில் மாற்றமில்லை. தேசிய ஜனநாயக் கூட்டணியின் தேசிய பொதுசெயல் திட்டத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications