50 வயதில் திருமணம் தேவையா.. பெண் வக்கீலை அவமதித்த திருமண பதிவு அதிகாரி
ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பதிவுத் திருமணம் செய்ய வந்த 50 வயது பெண் வக்கீலை, இந்த வயதில் திருமணமா என்று கேலி செய்து சிக்கலில் மாட்டியுள்ளார் திருமணப் பதிவு அதிகாரி ஒருவர்.
அந்த வக்கீலின் பெயர் நிர்மலா ரைக்வார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சீனியர் வக்கீலாக இருக்கிறார். இவர் தன்னை விட வயது குறைந்த ரமேஷ் ரைக்வாரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து ஜபல்பூர் கூடுதல் கலெக்டரும், திருமண பதிவு அதிகாரியுமான ஷீலேந்திர சிங்கை அணுகினார்.
அவரது மனுவைப் பார்த்த சிங், அத்தனை பேர் முன்னிலையில், இந்த வயதில் திருமணம் செய்கிறீர்களே, இது தேவையா என்று நக்கலாக கேட்டார். பின்னர் ரமேஷிடம் வேறு பெண் கிடைக்கவி்ல்லையா என்று இன்னொரு கிண்டல் கேள்வியை விடுத்தார்.
இதனால் கோபமடைந்த நிர்மலா, உடனடியாக மத்தியப் பிரதேச வக்கீல் சங்கத்திற்குத் தகவல் கொடுத்தார். மேலும் கோர்ட்டிலும் ஒரு வழக்குப் போட்டார்.
இந்த விவகாரம் தற்போது மத்தியப் பிரதேச வக்கீல்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications