காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம்: ஜெயலலிதா
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஆண்டு வழங்கியதுபோல், நடப்பாண்டிலும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் விரிவான ஆய்வு கூட்டம் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தாமோதரன், கே.வி.ராமலிங்கம், வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
மேட்டூர் அணையின் இருப்பு 3.45 டிஎம்சி அடியாக மட்டுமே உள்ளது. அணையின் நீர் வரத்து வினாடிக்கு 60 கன அடி என்ற வீதத்தில் உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமானதாக இருந்து, அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே, குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்க முடியும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.65 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து, தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது. 2013ம் ஆண்டில் மழையின் அளவு குறைவாக இருப்பதால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதை வைத்து, நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சில ஏக்கர் நிலப்பரப்பில் நெல் நாற்றங்கால் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த இக்கட்டான சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் அதிக அளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகள் புரிவது மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகளை கையாளுவது குறித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதன்படி, நிலத்தடி நீரை தற்போது பயன்படுத்தி நெல் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கியதுபோல், நடப்பாண்டிலும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இந்த மின்சாரம் இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படும்.
நீர் ஆதாரத்திலிருந்து வயலுக்கு நீரை எடுத்து செல்வதற்கு ஏதுவாக 180 மீட்டர் நீளம், 90 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட 6000 எச்டிபிஇ குழாய்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள், தாவர பூச்சிக்கொல்லி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக, சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications