12 நிமிடம் நடந்த தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் தனது வார்டில் மட்டும் இதுவரை எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை கண்டித்து அதிமுக மண்டல தலைவர் கோகிலா கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் மதுமதி, துணை மேயர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியவுடன் திமுக கவுன்சிலரும், மாநகராட்சியின் எதிர்கட்சி கொறாடாவுமான கோட்டுராஜா மாநகராட்சியில் 10 இடங்களில் துவங்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த உணவகங்களுக்கான தொகையை மாநகராட்சியில் இருந்து எடுக்காமல் தமிழக அரசிடம் இருந்து பெற வேண்டும் என்றார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைக்கேட்ட மேயர் சசிகலாபுஷ்பா இது தொடர்பாக முதல்வருக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக இத்திட்டத்தை குறைகூறும் திமுக கவுன்சிலர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் அம்மாவிற்கு தெரியும் என்றார்.
அதன் பின்னர் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த கமிஷனர் மதுமதி, பாபநாசம் அணையில் போதுமான தண்ணீர் இல்லாதது, மின்தடை போன்ற காரணங்களால் மாநகராட்சிக்கு கொண்டு வரும் தண்ணீரின் அளவு கொஞ்சம் குறைந்துள்ளது. இருந்த போதும் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கப்படுகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி உள்பட சுமார் 15 கோடி ரூபாய் திட்ட மதிப்பிற்கான பணிகள் உட்பட 13 தீர்மானங்களும் ஆல்பாஸ் என்ற ரீதியில் நிறைவேற்றப்பட்டது. சரியாக 3.15 மணிக்கு துவங்கிய மாநகராட்சி கூட்டம் 12 நிமிடத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டம் துவங்கிய நேரத்தில் மாநகராட்சியின் 3வது வார்டு கவுன்சிலரும், அதிமுகவின் வடக்கு மண்டல தலைவருமான கோகிலா கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். மாநகராட்சியில் 2 ஆண்டுகள் முடிந்தும் இன்று வரை எனது வார்டிற்குட்பட்ட சில்வர்புரம், ராஜகோபால்நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைப்பணிகள் உள்ளிட்ட எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
மேயரிடம் இது தொடர்பாக நேரில் சென்று பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து எனது வார்டில் பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. எனவே இதனைக் கண்டித்தே நான் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினேன் என்றார்.
மேயராக அதிமுகவை சேர்ந்தவர் இருந்து வரும் நிலையில் அதிமுக மண்டல தலைவர் தனது வார்டில் பணிகள் நடக்கவில்லை என்று குற்றம்சாட்டி கூட்டத்தை புறக்கணித்தது இதர கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications